தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க உள்ளதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை கடற்பரப்பில் வழமையான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்று காலை ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் சந்தேகத்திடமான மீன்பிடிப் படகு ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த படகை நெருங்கி நடத்த்திய விசாரணையில் அதில் இருந்த மூவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அம்மூவரையும் கைது செய்து படகையும் கைப்பற்றியுள்டளனர்.
மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டிற்கு சென்று அங்கிருந்து கேரள கஞ்சாவினை வாங்கி வந்ததாகவும் கடற்படையினரை கண்டதும் கடலில் போட்டுவிட்டு நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை அடுத்து கடலில் நடத்திய தேடுதலில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நிலையில் கடலில் போடப்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கேரள கஞ்சா கடத்தலுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை கடற்படை முகாமில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விசாரணையில் தமிழ்நாட்டு கரையோரப் பகுதியில் தரையிறங்கி அங்குள்ளவர்களுடன் தொடர்புபட்டே கேரளக் கஞ்சாவை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவித்த கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்திய பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, பருத்தித்துறை